Thamileelaarasiyalthurai.ca

வடக்கில் நாளை முடங்கும் தனியார் பேருந்து சேவைகள்..! வெளியான அறிவிப்பு

வடக்கில் நாளை முடங்கும் தனியார் பேருந்து சேவைகள்..! வெளியான அறிவிப்பு

தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு!
நாளைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெற இருக்கும் “கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்துடன் தொடர்பான பூரண ஹர்த்தாலுக்கு” சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பாக எமது முழு ஆதரவினை தெரிவித்து கொள்கின்றோம்.

நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் த.சிவரூபன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,
அதேவேளை இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு.
இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி உட்பட தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்விவகாரத்தின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டு, இதனை தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதோடு அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம் -என்றுள்ளது

கொக்குத்தொடுவாயில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித‌ எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன‌ குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு முழுவதும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முழுக் கடையடைப்பு நடாத்துவதற்கு வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதே தினத்திலே வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட‌ செயலகத்தினை சென்றடையும் வகையிலான‌ ஒரு பேரணியும் இடம்பெறவுள்ளது. இந்த முழுக் கடையடைப்புக்கும் பேரணிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் வழங்குகிறது.
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலே பல்வேறு மனிதப் புதைகுழிகள் சூரியக்கந்த, செம்மணி, யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, மாத்தளை, களுவாஞ்சிக்குடி மற்றும் மன்னார் போன்ற இடங்களிலே கண்டுபிடிக்கப்பட்டன‌.
இலங்கையினை ஆட்சி செய்த‌ அரசுகள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே போராடிய பல்வேறு இயக்கங்களையும், அமைப்புக்களையும் சேர்ந்தோர் சட்டத்துக்குப் புறம்பான முறையிலே, இராணுவமயமாக்கப்பட்ட சூழலிலே படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் மனித உரிமைகளை முன்னிறுத்திச் செயற்பட்ட செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும், மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்த வெவ்வேறு போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட‌ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை இன்று வரை நீடிக்கிறது.
இவ்வாறு போராட்டங்களிலே ஈடுபட்டுவர்களினதும், செயற்பாட்டளர்களினதும், பொதுமக்களினதும் உடலங்களின் எச்சங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடலங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா என்ற பயம் அவர்களின் உறவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.
இந்தப் புதைகுழிகள் பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையினை ஆட்சி செய்த அரசுகள் நம்பகமான எந்தச் செயன்முறையிலும் ஈடுபடவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் வேதனையினை அனுபவித்து வருவதுடன், கடுமையான‌ பொருளாதாரச் சுமையினையும், அரசின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியிலே கண்டுபிடிக்கப்பட்ட உடைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகளாக இருக்கின்றன.
சரணடைந்த‌, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியினை முன்வைத்து, நீதி கோரும் வகையில், அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் பல வருடங்களாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலே பயத்தினையும், வேதனையினையும் அவர்களின் குடும்பத்தவர் மத்தியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்பும், பேரணியும் கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி குறித்து நாட்டினதும், உலகினதும் கவனத்தினையும் ஈர்க்கும் வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசிலே வேரூன்றிப் போயிருக்கும் சட்டத்துக்குப் புறம்பான கொலை செய்யும் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலே அமைகின்றன.
எனவே இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களும், தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
கொக்குத்தொடுவாய்ப் புதைகுழி குறித்தும், நாட்டிலே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய புதைகுழிகள் குறித்தும் முறையான, நேர்மையான‌ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தப் புதைகுழிகளுக்குப் பின்னணியாக இருந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அத்துடன் வடக்குக் கிழக்கிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு உடனடியாக மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதுடன், அவர்களிற்கான நீதியும் கிடைப்பதற்கு வழி செய்யப்படல் வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்புக்கும் பேரணிக்கும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகிறது – என்றுள்ளது

வடக்கில் நாளை முடங்கும் தனியார் பேருந்து சேவைகள்..! வெளியான அறிவிப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்ற, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பூரண ஆதரவு வழங்குவதோடு நாளை போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது என மாவட்ட
தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால்..! யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஐயகுமார்,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதுடன் அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்குகின்றது.
அதனுடன் அன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கும் எமது ஆதரவை தெரிவிக்கின்றோம்.
அந்த வகையிலே இன்று கறுப்பு ஜுலை வாரத்தை அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற வேளையிலும் எங்களுடைய தமிழ் மக்களுடைய பாரதூரமான பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த அகழ்வு பணியில் கூட காவல்துறையினர் மட்டுமே காணப்படுகின்றனர். மேலும் சர்வதேச அமைப்புகள் ஒன்றுமே காணப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எங்களுடைய பிரச்சனையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளே மறைத்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையிலே தமிழ் மக்களாகிய எங்கள் பிரச்சினைகள் வெளிப்படையாக தீர்வினை பெற வேண்டும். இன்றும் நாம் சுதந்திரமாக எமது நினைவேந்தல்களை கூட மேற்கொள்ள முடியாது இருக்கின்றோம்
ஆகவே சரணடைந்த எங்களது காணாமலாக்கப்பட்ட உறுவுகளுக்கு நீதி வேண்டும் .அந்த வகையிலே அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவினை வழங்கவேண்டும் – என்றார்.
மனிதப் புதைகுழி விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு வலுச் சேருங்கள்- ரவிகரன் வேண்டுகோள்!
வரும் வெள்ளியன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் திரண்டு பங்கேற்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தங்களிடமே தந்துதவுங்கள் என்கிற கோரிக்கையோடு 2500 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராடி வருகிறார்கள்.
தங்களுடைய உறவுகள் தான் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் வெளிப்படுகின்றார்களோ என்கிற ஐயப்பாட்டோடு இருக்கும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் க்கப்பட்ட உறவுகள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 28.07.2023 காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி, இலங்கை அரசை பொறுப்புக் கூற வைக்க வேண்டி இடம்பெறவுள்ள உறவுகளின் போராட்டத்தில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்று திரண்டு பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக ஆரப்பாட்டம் மேற்கொள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கு தொடுவாய் பகுதியில் கடந்த மனித புதைகுழி ஒன்று நீர் குழாய் பொருத்தும் வேளையில் ஈடுபட்டிருந்தவர்களால் இனங்காணப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது அந்தப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுலியை அளிக்கும் நோக்கில் தற்பொழுது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து எதிர்வரும் 28 07.2023ஆம் திகதி அன்றைய தினம் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அனைத்து தரப்பினரும் இனைந்து பூரண கறுத்தால் மேற்கொள்ளப்படுவதுடன் முல்லைத்தீவு வட்டுவாகள் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு முள்ளத்தீவு மாவட்ட செயலகம்வரை பரிய ஆரப்பாட்டம் ஒன்றை 28.04.2023 அன்றைய தினம் முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்கவரத்து ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இன்றைய தின ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி தெரிவித்துள்ளார்.

தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்